Sunday, September 5, 2010

சச்சினுக்கு கேப்டன் பதவி

கிரிக்கெட்டில் சாதனைகள் புரிந்து ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற சச்சினுக்கு இன்னொரு பெருமை தேடிவந்துள்ளது. இந்திய விமானப்படையில் "குரூப் கேப்டன்` என்ற பதவிதான் அது.



  இந்தியாவிலேயே, விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவருக்கு இந்த கவுரவ பதவி வழங்கப்படுவது இதுவே முதல் முறை.

டில்லியில் நேற்று நடந்த விழாவில், விமானப்படை தலைமைத் தளபதி பி.வி.நாயக் இக்கவுரவப் பதவியை சச்சினுக்கு வழங்கிப் பெருமைப்படுத்தினார்.

தேசத்துக்காக சிறப்பாக பணிபுரிபவர்களை கவுரவப் படுத்தும் வகையில், இந்திய பாதுகாப்புப் படை சார்பில் கவுரவப் பதவிகள் வழங்கப்படுகின்றன. இதற்கு முன் 1944ல் ஜவஹர் ராஜா யஷ்வந்த் ராவ் (பிளைட் லெப்டினன்ட்), 1974ல் தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா (ஏர் வைஸ் மார்ஷல்) உள்ளிட்ட 21 பேர்களுக்கு கவுரவ பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

1983ல் உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவுக்கு, இந்திய ராணுவப் படை சார்பில் கடந்த 2008ல் லெப்டினன்ட் கர்னல் (கேப்டனுக்கு அடுத்த அந்தஸ்துள்ள பதவி) வழங்கப்பட்டது.

இப்பதவியை சச்சினுக்கு வழங்க, விமானப்படை சார்பில் கடந்த ஜனவரியில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு தொடர்பான அடிப்படை பயிற்சிகளும் அவருக்கு அளிக்கப்பட்டன. இதையடுத்து,நேற்று டில்லியில் நடந்த வண்ணமிகு விழாவில் "குரூப் கேப்டன்` கவுரவ பதவியை, விமானப்படையின் தலைமைத் தளபதி பி.வி. நாயக், சச்சினுக்கு வழங்கி கவுரவித்தார். தவிர, விமானப்படையில் சேரும் ஆசையை இளைஞர்களிடம் தூண்டும் விதமாக, விமானப்படையின் தூதராகவும் இவரை நியமித்தார்.

இதுகுறித்து பி.வி.நாயக் கூறுகையில்,"" இளைஞர்களால் கவரப்பட்டவர் சச்சின். இவருக்கு "குரூப் கேப்டன்` விருது வழங்குவதன் மூலம், இளைஞர்கள் ஏராளமானோர் விமானப்படையில் இணைவார்கள். எதிர்காலத்தில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கின்றனர் எனத் தெரியாது. ஆனால் இந்நிகழ்ச்சியினால் பள்ளி மாணவர்கள் வந்து இணைவார்கள் என்று நம்புகிறேன். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, எங்களுடன் இணைந்து சச்சின் உதவுவார்,`` என்றார்.

கவுரவ பதவியேற்புக்குப் பின்னர், மேடையில் நெகிழ்ச்சியுடன் சச்சின் பேசியது:

இந்திய விமானப்படையின் சார்பில் கவுரவ பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டது, பெருமகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியுள்ளது. விமானப்படையின் உறுப்பினராக இணைந்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். தவிர, இதன் தூதராகவும் சிறப்பாக செயல்படுவேன். இந்திய இளைஞர்கள் விமானப்படையில் சேர முன்வர வேண்டும். ஏனெனில் இதன் மூலம் நமது தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உங்கள் கனவு நிறைவேறும்.
இவ்வாறு சச்சின் பேசினார்.

செய்தி: கேப்டன் சச்சின் விரைவில் அதிவேக சுஹோய் விமானத்தில் பறக்கப்போகிறாராம். வாழ்த்துக்கள் கேப்டன் ”ஏர்டெல் சாம்பியன் லீக்” போட்டிக்கும்...

Thursday, September 2, 2010

முதன் முதலாய் அம்மாவுக்கு..

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கவிதை


முதன் முதலாய் அம்மாவுக்கு..

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரு(மை)ம
ஒத்தவரி சொல்லலையே! 

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?

பொன்னையாத் தேவன் பெத்த
பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புல்வலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாணப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

திக்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம(ப்)
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேலையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போபபின்னே

அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!


வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்கு வேற தாயிருக்கா.?