Friday, November 6, 2009

சச்சின் - நான் ரசித்த இரண்டு பதிவுகள்!

சச்சின் எனும் மாவீரன்!!


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவை டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டுமெனில் முதலில் அவர்கள் அவுட் ஆக்க நினைப்பது
லட்சுமணனை. இந்தியாவை ஒருநாள் போட்டிகளில் தோற்கடிக்க நினைத்தால் முதலில் எடுக்க விரும்பும் விக்கெட் சந்தேகமில்லாமல்
சச்சினைத்தான். இன்று நடந்த போட்டியையும் சேர்த்தால் இதுவரை ஒன்பது சதங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே சச்சின் அடித்திருக்கிறார்.

முதல் பேட் செய்த ஆஸி.வீரர்கள் 350 ரன்களை குவித்தபோது கடைசி பந்தில் அவுட்டானார் கேமரூன் ஒயிட். அந்த பந்து தஞ்சமடைந்தது சச்சினின் கைகளில். பிடித்தவுடன் கோபத்தில் பந்தை தரையில் அவர் எறிந்தபோதே அவரது ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள் இன்றொரு ருத்ரதாண்டவம் இருக்கிறதென்று!! ஏனெனில் சச்சின் கோபப்படுவது மிக அபூர்வம்.

ஷார்ஜாவில் பதினோரு வருடங்களுக்கு(1998) முன்பு சச்சின் அடித்த அடியை எந்த ஒரு கிரிக்கெட் ரசிகனும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது.காரணம், அவர் அடித்த இரண்டு சதங்களால்தான் இந்தியாவுக்கு அந்த கோப்பை கிடைத்தது என்பதை காட்டிலும் அந்த இரு சதங்களை எப்படி அவர் அடித்தார் என்பதே ஆகும். காஸ்பரோவிச் என்னும் ஆஸி பவுலரை அவர் அடித்த அடியில் சில வருடம் அவரை ஆஸி அணியிலேயே காணமுடியவில்லை. எதிர்முனையிலிருந்து லட்சுமணன் இரண்டாவது ரன் எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் ஒரு ரன்னோடு நின்றுவிட்டார். புயலனெ விளையாடிக்கொண்டிருந்த சச்சின் வேகமாக சென்று லட்சுமணனிடம் இப்படி சொன்னார் "ஓட முடியாவிட்டால் ஏன் கிரிக்கெட் விளையாட வந்தாய்?" காரணம் அது இறுதிபோட்டி.

பைனலில் ஆஸி இந்தியாவிடம் தோற்ற போது ஸ்டீவ் வாக் சொன்னார்...

"It was one of the greatest innings I have ever seen. There is no shame being beaten by such a great player, Sachin is perhaps only next to the Don."


தனது சட்டையை கழற்றி சச்சினிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஷேன் வார்ன் புலம்பி்யது இப்படி:

"I'll be going to bed having nightmares of Sachin just running down the wicket and belting me back over the head for six. He was unstoppable. I don't think anyone, apart from Don Bradman, is in the same class as Sachin Tendulkar. He is just an amazing player"

2004ல் சச்சின் சற்று சறுக்கியபோது
Times of India பத்திரிகை அவரது கார்டூனை முதல் பக்கத்தில் வெளியிட்டு "END-DULKAR?" என்று ஏளனம் செய்தது. அப்போதும் சச்சின் அமைதியாகவே இருந்தார். அதன்பிறகான ஒரு போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக அவர் அடித்த 140 ரன்கள் சச்சினுக்குள் இன்னும் கிரிக்கெட் மிச்சமிருக்கிறது என்பதை உணர்த்தி பத்திரிகைகளை வாயடைக்க செய்தது.

விழுகின்ற போதெல்லாம் விழுந்துவிட்டோம் என்று கலங்கி ஒதுங்கி விடும் கிரிக்கெட் உலகில் விழுவதே எழுவதற்காகத்தான் என்பதை சச்சின் நிரூபித்துக்கொண்டே இருப்பார்.

இந்த முறை ஆஸிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சற்று தடுமாறிவுடன் வழக்கம்போல் பத்திரிகைகள் சச்சின் தேவையா என்று எழுத ஆரம்பித்தன. மூன்றாவது போட்டியில் எதிர்பாராத ரன் அவுட்(பவுலர் மறைத்துக்கொண்டதால்) என்றபோது அவர் அடித்த 32 ரன்கள் அடுத்த போட்டிக்கான விதையாகவே எல்லோர் மனதிலும் விழுந்தது. நான்காவது ஒருநாள் போட்டியில் 40 ரன்கள் எடுத்த நிலையில் "பக்னர்" ஞாபகத்தில் நின்ற நடுவரால் தவறுதலாக எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டபோது சச்சினுக்காக பரிதாப பட மட்டுமே முடிந்தது.

ஆனால் இன்று?

19 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள்,141 பந்தில் 175 ரன்கள்! ஆஸி அணி கடைசில் ஜெயித்தாலும் மனதளவில் வெற்றி இந்தியாவுக்குத்தான் என்பதில் சந்தேகமே இல்லை. எங்கள் தேசத்தின் இணையற்ற விளையாட்டு வீரனின் மிகச்சிறந்த ஆட்டத்தை ஆஸி ரசிகர்கள்கூட கொண்டாடி இருப்பார்கள்!
36 வயதில், சேசிங் செய்யும்போது 175 ரன்கள் என்பதெல்லாம் எல்லா விளையாட்டு வீரனாலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. Good க்கும் Greatக்குமான வித்தியாசத்தை இங்கே நாம் அறிந்துகொள்ளலாம்.

சென்னையில் 1999ல் பாக் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகுந்த முதுகு வலியுடன் சச்சின் இந்தியாவை வெற்றியை நோக்கி இழுத்துச்சென்றார். எதிர்பாராதவிதமாக 15க்கும் குறைவான ரன்கள் தேவைபடும்போது சக்லைன் முஷ்டாக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு இந்திய கிரிக்கெட் அணி தங்களுக்கே உரித்தான "வாக் ஷோ" நடந்தேறியது. பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெற்றி பெற வேண்டிய இந்திய அணி தோல்வியை தழுவியது. ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்த தோல்வியை தாங்க முடியாத சச்சின் கதறி அழுததாக உடனிருந்தவர்கள் பின்னாட்களில் வருத்தத்தோடு சொன்னார்கள்.இன்றும் அது நடந்திருக்கலாம். ஒரு மகாவீரனின் கண்ணீர்துளிகள் அவனை அறியாமலேயே பல வித்துக்களை உருவாக்குகிறது.அவரது கண்ணீரின் வலிமை இனி வரும் இரு போட்டிகளில் இந்தியா வெற்றி பெறும் என்பதை வெகு நிச்சயமாக நமக்கு உணர்த்துகிறது.

சச்சினின் விளையாட்டை பார்த்தே கிரிக்கெட் மீது ஆர்வமாகி விளையாட வந்த கிரிக்கெட் வீரர்கள் பலர். சேவாக்,யுவராஜ்,தோனி போன்ற அதிரடி கிரிக்கெட் வீரர்களுக்கு சச்சின் தான் காட்பாதர்.

சச்சினின் விளையாட்டை பார்ப்பதற்காகவே கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர்கள் பலகோடி மக்கள். 90களில் சச்சின் அவுட் ஆகிவிட்டால் டிவியை அணைத்துவிட்டு மறுநாள் செய்திதாளில் இந்தியா தோற்றதை அறிந்துகொள்ளலாம்.

சச்சின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் அவருக்கு அடுத்ததாக களமிறங்கவேண்டிய அசாரூதின் பெஞ்சில் அமர்ந்து உறங்கி கொண்டிருப்பார்.எப்படியும் சச்சின் உடனே அவுட் ஆகபோவதில்லை என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்.

1999ல் பாக்கிஸ்தானிடம் தோற்ற ரணத்தை அதற்கு பழிதீர்க்கும் விதமாக 2003 உலககோப்பையில் தீர்த்துக்கொண்டார் சச்சின். அவர் அடித்த அடியில் தன்னை இனி பந்துவீச அழைக்க வேண்டாம் என்று வாக்கார் யூனிஸிடம் கெஞ்சினார் சோயிப் அக்தர்!! எத்தனையோ சதங்களை சச்சின் விளாசி இருந்தாலும் அந்த போட்டியில் அடித்த 97 ரன்கள் One of the best innings for the Little Master!!

இன்றைய சச்சினின் ருத்ரதாண்டவத்தை ஆஸியின் புதிய வீரர்கள் இதற்கு முன் பாத்திருக்கவில்லை(பாண்டிங்கை தவிர) மயிரிழையில் ஜெயித்தபோதும் இனி வரும் போட்டிகளில் இந்த மாவீரனை எப்படி எதிர்கொள்வது என்பதே இப்போது அவர்களது கவலையாக இருக்கும்.

வெகு நாட்கள் கழித்து "பழைய" சச்சினை பார்த்த ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு மிஞ்சி இருக்கும் இருபோட்டிகளை இந்தியா வெல்ல சச்சின் காரணமாக இருக்கவேண்டும் என்பதுதான்.

சச்சினின் உடலில் காயம் இல்லாத இடமே இல்லை எனலாம். டென்னிஸ் எல்போ,முதுகுவலி இப்படி நிறைய. ஆனாலும் தொடர்ந்து சச்சின் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒரே ஒரு காரணம் அது 2011 உலககோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத்தர வேண்டும் என்கிற வெறி.

2003 உலககோப்பையை வெல்ல இந்திய அணியினர் 100% போராடியபோதும் சச்சின் மட்டும் 200% போராடினார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு கறுப்பு தினத்தில் ஆஸியிடம் பைனலில் தோற்றபோது சச்சினை தொடரின் ஆட்டநாயகன் விருதை வாங்க அழைத்தார்கள். அப்போது மேடையேறிய சச்சினின் கவலைதோய்ந்த முகத்தை இன்றுவரை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த Agony மாறும் 2011ல்.

ஒரு மிகச்சிறந்த சச்சின் - வாசகத்தோடு இதை நிறைவுசெய்கிறேன்.


"Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord Is watching." 

நன்றி: நிலா ரசிகன் (http://www.nilaraseeganonline.com/2009/11/blog-post_06.html) 


சச்சினாலா தோற்றோம்?

6 November 2009 549 views 12 Comments
If you're new here, you may want to subscribe to my RSS feed. Thanks for visiting!

 இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு சவால் விட்டு நிர்ணயித்த இலக்கு 351.
 
50 ஓவர்களில் 351 ரன்கள் என்பது மிகவும் கடுமையான, ஒரு ஓவருக்கு சராசரியாக 7.50 ரன்கள் எடுத்தால் மட்டுமே அடையக்கூடிய இலக்கு. என்னதான் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தாலும் தொடர்ந்து வேகமாக விளையாடினால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும்.

அதுவும் பீல்டிங்கில் கேட்ச் விடாகண்டர்களும், போலிங்கில் ரன் கொடாகண்டர்களும் நிரம்பிய ஆஸ்திரேலியா போன்ற எதிரியை சமாளித்து இத்தனை ரன்கள் எடுப்பது என்பது 50 ஓவர்களில் 450 ரன்கள் எடுப்பதற்கு சமம்.

சாதாரணமாக விளையாடுவதை விட இரண்டு மடங்கு சிறப்பாகவும், சாமர்த்தியமாகவும் விளையாட வேண்டியது அவசியம். நல்ல அஸ்திரங்கள் இல்லாமல் ஆஸ்திரேலியர்களை வெல்ல முடியாது.

நம்முடைய அஸ்திரங்கள் ஷேவாக், கம்பீர், யுவராஜ், தோனி, ரய்னா இவர்களுடன் ப்ரம்மாஸ்திரமாக சச்சின். ஷேவாக் வழக்கமான பாணியில் தீபாவளி 1000 வாலா போல விளையாடிவிட்டு போனாலும் பின்னே வந்த கம்பீர், யுவராஜ், தோனி ஆகிய அஸ்திரங்கள் இன்று 160 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே பொய்த்தன. 162க்கு நாலு மாட்டிக்கொண்டிருந்த இந்தியாவுக்கு இன்னும் வெற்றி பெறலாம் என்று நம்பிக்கை இருந்தது, காரணம் சச்சின் என்கிற ப்ரம்மாஸ்திரம் ஆஸ்திரேலியர்களை பந்தாடிக் கொண்டிருந்ததுதான்.

எல்லோரும் பெவிலியனுக்கு நடையை கட்டிய பின்னும் 7 அடித்தவுடன் 17 ஆயிரம் தொட்ட சச்சின் ரய்னாவை சரியான வழியில் நடத்தி புது நிறுவனம் கண்டு இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அருகே ஓட்டி வந்து விட்டார். ”சச்சின் அடிச்சா இந்தியா ஜெயிக்காது” என்று சச்சின் பழிப்போரில் முதல் வரிசையில் நிற்கும் நான் கூட ”சரிதான் இன்னிக்கு மனுஷன் நம்ப முகத்துல கரி பூசப்போறார்” என்று நினைத்துக் கொண்டு ஒரு மன்னிப்பு பதிவு போட வேண்டும் என்று மனதிற்க்குள் பதிவுக்கான வார்த்தைகளை தேட துவங்கிவிட்டேன். அப்படி இருந்தது சச்சினின் சூறாவளி ஆட்டம்.

ரய்னா வெளியேறவும் கொஞ்சம் பயம் கவ்வியது. இருப்பினும் ஜடேஜாவுக்கும் வழிகாட்டி சச்சின் நம்மை வெற்றி இலக்குக்கு 19 ரன்கள் மட்டுமே தேவை என்று கொண்டு வந்து விட்டார். அவ்வளவுதான் இன்னும் ஓரிரு ஓவரில் வெற்றி என்று நினைக்கும்போது சச்சின் மெக்கேயிடமிருந்து ஒரு பவுண்டரி சம்பாதிக்க நினைத்து தூக்கியதில் வாட்சன் கையில் பந்து விழுந்தது, நம் கண்ணில் மண் விழுந்தது.

ஜடேஜா மடத்தனமாக ஓடியும், அவருக்கு பின் வந்தவர்கள் பிட்சில் ஓடியோ ஓடாமலோ ஆடி அவுட்டாகி பெவிலியனை நோக்கி ஓடுவதிலேயே குறியாக இருக்க வெறும் மூன்று ரன்களில் இந்தியா தோற்றதில் ஆஸ்திரேலியா இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மூன்றுக்கு இரண்டு என்று முன்னேறிவிட்டனர்.
சச்சின் அவுட்டான பின் நமக்கு தேவையாக இருந்தது பத்தொன்பதே ரன்கள். அதை மற்ற 4 பேரும் சேர்ந்து அடித்திருந்தால் சச்சினை பாராட்ட நாடே புறப்பட்டிருக்கும்.

அது நடக்காததால் நான் உள்பட அத்தனை சச்சின் துவேஷிகளும் மேட்ச் தோல்வியான கோபத்தில் சச்சின் தனியாக ஆஸ்திரேலிய பந்தர்களை அற்ப பதர்களாக்கி பந்தாடி 175 (141 பந்துகள், 19 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) அடிக்க மற்ற பத்து தின்னபோத்து தடிராமன்களும் எக்ஸ்ட்ரா துணையுடன் 172 மட்டுமே அடித்திருப்பதை ரொம்ப கன்வினியண்டாக மறந்து இந்த தோல்வி சச்சினால் மட்டுமே ஆனது போல் ”சச்சின் எப்பவுமே இப்படித்தான், He never finishes”, ”இன்னும் 20 ரன்தானே தள்ளி தள்ளி அடிச்சிருக்கலாமே”, “சரியான சமயத்துல தூக்கி குடுத்துட்டான்” என்று சச்சிநிந்தனை செய்ய ஆரம்பித்து விடுகிறோம்.
இன்று கூட மேட்ச் முடிந்ததும் எழுத்தாளரும், நண்பருமான  சொக்கன் சாட்டில் வந்து வருத்தத்துடன், ஒரு பாட்டம் நம் தோல்வியை பற்றி பேச வந்தார். நான் சச்சின்தான் காரணம் என்று கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல் சாட்ட, “யூ டூ ப்ரூட்டஸ்” என்று சொல்லாத குறையாக அழுகையுடன் சாட்டில் பதில் கூட சொல்லாமல் மூடு இன்னும் ஆஃப் ஆனதில் ஆஃப்லைனாகி காணாமல் போனார்.

அதற்கு பிறகுதான் கொஞ்சம் யோசித்து பார்த்தேன்.

உண்மை என்ன? சச்சினாலா நாம் தோற்றோம்? சச்சின் நன்றாக ஆடியதால் மட்டுமே நாம் 150, 160 என்று எல்லா ஆளும் அவுட்டாகாமல், கிட்டத்தட்ட வெற்றிபோல கொண்டாடப்படவேண்டிய வெறும் 3 ரன் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறோம்.

சச்சின் எப்படி அவுட் ஆனார்? இளம் வீரர் மற்றும் டென்ஷன் பேர்வழியான ஜடேஜாவை டென்ஷனில் இருந்து காப்பாற்ற மீதமுள்ள ரன்களை தானே எடுத்து விடலாம் என்ற முயற்சியில்தானே? அவர் விரட்டிய பந்து வாட்சன் கையில் விழாமல் பவுண்டரிக்கு போயிருந்தால் (ஓரிரு மீட்டர்தான் வித்தியாசம், இன்னும் சரியாக தட்டியிருந்தால் பவுண்டரிக்குதான் பந்து போயிருக்கும்) ”சூப்பர் ஷாட்” என்று அவரை கொண்டாடியிருக்க மாட்டோம் நாம்?

சச்சின் டென்டுல்கர் என்ன சாதாரண கிரிக்கெட் வீரரா?

* இந்த மேதை ஆட்டக்காரர்தான் கடைசி ஓவரில் 4 எடுத்தால் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி என்ற நிலையில் பந்தை பிடுங்கி தானே அந்த ஓவரை போட்டு இந்தியாவுக்கு ஹீரோ கப் வாங்கித்தந்தவர்

* இவர்தான் 1999-ல் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் நடந்தபோது தன் தந்தை மரணம் அடைந்த துக்கம் தீருவதற்குள் ஈமக்கிரியைகள் முடிந்தவுடன் மீண்டும் நாட்டுக்காக விளையாட விமானம் ஏறியவர்

* இவர்தான் தன்னந்தனி சேனையாக ஷார்ஜாவில் ஆஸ்திரேலியர்களை கதிகலங்க அடித்தவர்

* இவர்தான் யாருமே பெறாத அளவுக்கு ஆட்டநாயகன் விருதுகளை பெற்றவர் (ஆட்டத்தின் வெற்றியில் முக்கிய பங்கு இல்லையென்றால் ஆட்ட நாயகன் விருது எப்படி கிடைக்கும்?)

* கிட்டத்தட்ட 159 டெஸ்ட் மேட்ச்சுகள், 435 ஒருநாள் பந்தயங்கள் என்று விளையாடி தன் வாழ்நாளில் 1000க்கும் மேற்பட்ட நாட்களை நம் மிகவும் விரும்பும் விளையாட்டுக்கு அளித்தவர்

அவருடைய சிறப்பான ஆட்டத்தை பாராட்டாமல் அவர் அவுட்டானதுதான் நம் தோல்விக்கு காரணம் என்று நான் சொன்னதில் கொஞ்சமும் நியாயம் கிடையாது. தோல்வி தந்த கோபத்தில் நான் அப்படி அநியாயமாக சச்சினுக்கு எதிராக பலமுறை நினைத்தும், பேசியும் இருக்கிறேன். இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

(Thanks to: http://www.sathyamurthy.com/2009/11/06/did-we-lose-because-of-sachin/)

இன்று மேட்ச் முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் சச்சின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அவர் முகத்தில் ஆட்டநாயகன் விருது பெற்ற மகிழ்ச்சி இல்லை. அவருக்கு தான் எடுத்த 175 பெரிதாக தெரியவில்லை, எடுக்காத மூன்றுதான் முகமெங்கும் இருந்தது.

No comments:

Ad