Sunday, November 15, 2009

மாயாவதி - புயலின் வாழ்க்கை

மாயாவதி - புயலின் வாழ்க்கை

 மாயாவதி = 100 ஜெயலலிதாவுக்கு சமம் என்று என்னிடம் பலர் கூறினார்கள். அது நிஜம் தான், ஆனாலும் மாயாவதி என்பவர் தலித்+பெண் என்ற இரண்டு பெரிய தடைகளை உடைத்து வந்தவர் என்பது இந்த புத்தகத்தை புரட்டிய பின்பு தான் தெரிந்துகொள்ள முடிந்தது.
பலரும் நினப்பது போல மாயாவதி கிராமத்தில் பிறந்தவர் இல்லை., இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் பிறந்து வளர்ந்தவர். 1956-ம் வருடம் ஜனவரி 15-ம் தேதி இரண்டாவது பெண் குழந்தையாக பிறந்த, இவரின் அப்பா சாதாரண எழுத்தர். இருந்தும் மாயாவதி அம்மாவின் அரவணைப்பால் பி.ஏ., பி.எட்., வரை பயின்றார், பின்னாலில் சட்டம்(பி.எல்) கூட படித்துள்ளார். சிறுவயது முதலே மாயாவதிக்கு அப்பாவின் மீது பற்று இல்லை என்கிறார் நூலாசிரியர் சி.என்.எஸ்.
இளங்கன்று பயம் அறியாது!
மாயாவதி, “சிறு வயது முதலே தன்னை ஒரு தாழ்ந்த சாதியாக நம்பத்தயாராக இல்லாதவர்”. காந்தியின் மீது அளவற்ற வெறுப்பும், அம்பேத்கர் மீது பாசமும் உடையவராக காணப்பட்டார். ஒருமுறை பள்ளி மேடையில் பேசும்போது, “நாங்கள் கடவுளின் குழந்தைகள் (ஹரிஜன்) என்றால், காந்தி என்ன சாத்தானின் குழந்தையா? என்று தன் ஆதங்கத்தை ஆழமாக பதிவு செய்தார். இந்த அடாபுடா பேச்சு தான் அவரை கன்ஷிராமிடம் கொண்டு சேர்த்தது.
ஹரிஜன் – மாயவதியின் கருத்து
ஹரிஜன் என்பது தங்களை பெருமைப்படுத்தவில்லை.! 
தங்களுக்கு எதிரான கொடுமைகளை, அநீதியை மறைக்க பார்க்கிறது..! என்ற பெரும்பாலான தலித் மக்களின் கருத்தை பதிவு செய்கிறார் சி.என்.எஸ்.  
இதைப்பற்றி மாயாவதி கூறுகையில்.. 
நான் ஹரிஜன் இல்லை. அந்த வார்த்தையை பயன்படுத்தி யார் என்னை அழைத்தாலும், அதை அவமானமாக கருதுகிறேன். நான் ஒரு தலித் என்பதையே பெருமையாக நினைக்கிறேன்
 பகுஜன் சமாஜ் கட்சி
மாயாவதி கன்ஷிராமை பார்த்த அந்த முதல் சந்திப்பிலேயே, இனிமேல் அவர் தான் தனது குருநாதர்”, என்று முடிவு செய்துவிட்டார். கன்ஷிராம்-மாயாவதிக்கு இடையே உள்ள தொடர்பு பற்றி இந்த நூலில் உள்ளவை சில: 
மான்யவர் கன்ஷிராமை, நான் எனது அரசியல் குருவாகவும், தந்தைக்கு இணையான ஒருவராகவும் மட்டுமே கருதுகிறேன் என்று மாயாவதி குறிப்பிடுகிறார். 
அதனையும் மீறிய விசேஷ கவனம், உரிமை உணர்வு (Possessive) இருவருக்குமிடையே இருந்ததாக சி.என்.எஸ் குறிப்பிடுகிறார். 
முதலில் மாயாவதியின் டார்கெட் பாராளுமன்றம் தான்., ஆனால் அந்த வெற்றியை சுவைக்க அவர் 4 தேர்தல்கள் மட்டுமல்ல; மீராகுமார் (இன்றைய நாடளுமன்ற அவைத்தலைவர்), ராம்விலாஸ் பஸ்வான் (முன்னாள் மத்தியஅமைச்சர்) போன்றோரையும் எதிர்த்து போராட வேண்டியதாயிற்று.
முதல்வர் மாயாவதி:
1992-ம் ஆண்டு ராமஜென்ம பூமி பிரச்னைக்கு பிறகு ஏற்ப்பட்ட குழப்பநிலையின் காரணமாக, மாயாவதி-முலாயம் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. முலாயம் தான் முதல்வர்; ஆனால் சூப்பர் சி.எம் மாயாவதியே! இதனால் ஆட்சி விரைவிலேயே கவிழ்ந்தது. பாஜக-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தார்., மாயாவதி. முதல் முறையாக இந்தியாவின் தலித் முதல்வரான பெருமையை பெற்றார்.
அன்றைய பிரதமர், நரசிம்மராவின் வாழ்த்து செய்தி..
சமூகத்தால் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்புக்கு உயர்ந்திருப்பது இந்திய மக்களாட்சியின் அதிசயம்.
கூட்டணி:
அதன் பிறகு மாயாவதி அமைத்தக் கொண்ட அனைத்துக் கூட்டணிகளாலும், அவர் அடைந்த நன்மையே அதிகம். முலாயம் சிங், பாஜக, காங்கிரஸ் என்று இப்படி மாற்றி, மாற்றி கூட்டணி அமைப்பதால் மக்கள் என்ன நினைப்பார்கள்? என்றெல்லாம் நினைக்க மாட்டார். வீட்டில் உட்கார்ந்திடுப்பதை விட கொஞ்ச நாளாவது ஆட்சி செய்யலாம், என்பது மாயாவதியின் கருத்து. 
அதற்காக யாருடனும் கூட்டணி அமைக்க அவர் தயங்கியதே இல்லை. பிராமணர்கள், ரௌவுடிகள் என்று இந்த பட்டியல் நீண்டது. உ.பி அரசியலில் தலித் மக்கள் தவிர, வேறு யாருடனும் அவர் நிரந்தரமாக கூட்டணி அமைத்ததே இல்லை.
தலித் மகள் – பிம்பத்தில் விரிசல்
2002-க்கு பிறகு முலாயம் தான் லேசாக பற்றவைத்து போட்டார் வெடியை! இவ்வளவு பணம், நகை, சொத்து இதெல்லாம் மாயாவதிக்கு எப்படி வந்த்து? எங்கிருந்து வந்தது? போன்ற கேள்விகளால் ஊடகங்களும் துளைத்தெடுத்தன.
கடைசியில் அமலாக்க பிரிவின் விசாரனைக்கு பிறகு, மாயாவதிக்கு உ.பி., டெல்லியில் 72 வீடுகளும், ஏராளமான பணம், நகை; போன்றவற்றை அவர் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துளார்”, என்றது.
இதற்கெல்லாம் மாயாவதியின் பதில் எல்லாவற்றுக்கும் என்னிடம் கணக்கு இருக்கிறது!!? ஆனால் இன்று வரை அது வெளியிடப்படவில்லை.
மக்கள் என் பக்கம்
இத்தனை விசாரணைக்கு நடுவிலும் 2006 தேர்தலில் தனியாக நின்ற மாயாவதி 206 (மொத்தம் 422) இடங்களில் வெற்றி பெற்றார்.  
எங்களுக்கு, மாயாவதி மீது நம்பிக்கை இருக்கிறது என்று மக்கள் தீர்ப்பளித்தனர். இது 13 வருடங்களில் மிகப்பெரிய வெற்றி. யாரும் பெறாத தனிப்பெரும்பான்மை.!
மாயாவதி – அடுத்த பிரதமர்
2009 தேர்தலின் போதே சரியாக காய் நகர்த்தி இருந்தால் மாயாவதியின் கனவு, நினைவாயிருக்கும். கன்ஷிராம் உயிரோடு இருந்திருந்தால் அது நடந்திருக்கலாம். இவர் அதை தவறவிட்டார், என்பது அனைவரும் அறிந்ததே!
ஆனாலும் நூலாசிரியர் கூருவது போல 50-களின் முற்பகுதியில் இருக்கும் மாயாவதிக்கு வயது இருக்கிறது! 2014-ல் கூட சாதிக்கலாம். 2019-ல் கூட அந்த நிகழ்வு நடக்கலாம்.!!


இதல்லாம் நடக்க மாயாவதிக்கு தேவை! இந்தியாவில் எப்போது பேசப்படும் 3வது அணியை சரிசெய்வது! சிறந்த கூட்டணியை உருவாக்குவது!! எல்லாருடணும் சமரசமாக செல்வது (பிஜேபி, காங்கிரஸ்) தவிர.!! மிக முக்கியம் சிறந்த கனிவான தலைமை பண்பு... இதில் மக்கள் ஆதரவை நான் சொல்லவில்லை, ஏனென்றால் மக்கள் என்றுமே அவர் பக்கம் தான்.....
மாயாவதி – என்றுமே மக்களின் ராணி. இப்புத்தகம் அவரை பற்றிய ஒரு அரிய தொகுப்பு..
இந்த புத்தகத்தை வாங்க:

விலை: ரூ. 80
ISBN :  978-81-8493-185-3
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
ஆசிரியர் கருத்து: பெண். தவிரவும், ஒரு தலித். எனவே, அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தொடர்ச்சியான அடக்குமுறைகளை மாயாவதி சந்திக்க-வேண்டிவந்தது. அடிதடிகளும் ஆர்ப்பாட்டங்களும் அடாவடிகளும் நிறைந்த அரசியல் களத்தில் கால் பதிப்பதே சவாலான காரியம் என்னும் நிலையில், அசாத்தியத் துணிச்சலுடன் போராடிய மாயாவதி இன்று நாட்டின் மிகப் பெரும் மாநிலத்தின் முதல்வர்.

No comments:

Ad